இலங்கை வலுவான, நிலையான மற்றும் போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறி, உலகளாவிய சந்தையில் வெற்றிகரமாக போட்டியிடக்கூடிய நாடாக உருவாக வேண்டும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
நேற்று(18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார மறுசீரமைப்புகள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார். இலங்கை தற்போது மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டியெழுப்பலின் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், அரச நிறுவனங்களை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு முதல் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துவதுடன், நிலையானதும் உற்பத்தித்திறன் மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.




