சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமுர்த்தி சமூக வலுவூட்டல் மாதத்தினை முன்னிட்டு “ஆரோக்கிய வசதியுடனான ஒரு வீடு வலுவான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் ரன்பிமன திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார்.
சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக தலா 10 இலட்சம் ரூபாவும், சமுர்த்தி பயனாளிகளின் சொந்த நிதியுடன் 24 இலட்சம் பெறுமதியான வீடுகள் பூரணப்பட்டு கையளிக்கப்பட்டன.
மேலும், சமுர்த்தி பயனாளிகளின் சொந்தக் கனவு இல்லங்களை நனவாக்கும் விதமாக புதிய வீடுகளுக் கான அடிக்கல் நாட்டு வைபவமும் இதன் போது இடம்பெற்றதுடன், பொருளாதாரத் தேவைகள் மற்றும் சுயதொழில் மேம்பாட்டிற்காக ‘சவிபல’ கடன்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், உதவிப் பிரதேச செயலாளர் வி. வாஸீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் வை.பி.எம். நபாஸ் மற்றும் பிரஜா சக்தி சமூக அபிவிருத்திச் சபை தவிசாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




