பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கோடையின் நான்காவது வெப்ப அலை வெப்பநிலை நேற்று மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காட்டுத் தீ அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது என்று வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெய்னின் ஆறு பிராந்தியங்களில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது.
பிரான்ஸில், பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட தென்மேற்குப் பகுதியில், நேற்று முன்தினம் சுமார் 33 டிகிரி செல்சியஸாக இருந்த வெப்பநிலை, நேற்று 42 டிகிரி செல்சியஸாக உயரும் என மெட்டியோ பிரான்ஸ் கணித்தது
அதனால் காலையில் தென்மேற்கிலிருந்தும், பிற்பகலில் மேற்கிலிருந்தும் வீசும் வறண்ட காற்று, தீப்பிழம்புகளை மேலும் தூண்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘வெப்பநிலை மீண்டும் உயரும். பிற்பகலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ள வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் நிச்சயமாக விழிப்புடன் இருப்போம் என்று தீயணைப்பு பிரிவுத் தளபதி மத்தேயு ஜோமெய்ன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், காட்டுத்தீ வேகமாகப் பரவ வழிவகுத்துள்ளதோடு வெப்பமும் வரட்சியும் தீவிரப்பட காரணமாகியுள்ளது என்றும் வானிலையாளர்கள் கூறியுள்ளனர்.
ரொய்ட்டர்ஸ்




