பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் பேரில், குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு நேற்று பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே சமிந்த விஜேசிறி எம். பி க்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி பந்துல ரத்நாயக்க மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான ரசிக கருணாதிலக ஆகியோருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொட்ஸ்கி, சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளிலும், பொலிஸ் உத்தியோகத்தர் ரசிக கருணாதிலக மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சாரதி பந்துல ரத்நாயக்க ஏற்கனவே மரணம டைந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் பண்டாரவளை நகர சுற்றுவட்டத்துக்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது குழுவினர் ஜீப் வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வாகனத்தை ஒரு பொலிஸ் ஜீப் முந்திச் சென்றது.இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




