பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து கிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டாவாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு மோல்டாவா சென்றுள்ள இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அந்நாட்டு ஜனாதிபதி மாயா சாண்டுவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளின் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இருதலைவர்களும் விரிவாகப் கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் மாற்றம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருந்துத் தொழில், விவசாயம், கல்வி, கலாசாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான புதிய வழிகள் குறித்தும் ஆராய்ந்த இரு தலைவர்களும் இந்தியா-மோல்டோவா வர்த்தக மன்றத்திலும் கூட்டாக உரையாற்றினர்.
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, புத்தாக்கம், உணவு பதப்படுத்துதல், தளவாடங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் ஒத்துழைப்புடன் செயற்பட இருநாடுகளும் ஆராய்ந்து வருவதாக இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்




