தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்கள் சிலவற்றிலிருந்து பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான மருந்துப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நாடு பூராகவும் தனியார் மருத்துவமனைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சுற்றிவைளப்புக்களில் இவை மீட்கப்பட்டிருந்தன. இந்நடவடிக்கையில் 52 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்தது.
சோதனையிடப்பட்ட பல ஆய்வகங்களில் நோயாளிகளின் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மருத்துவப் பொருட்களில் கடுமையான குறைபாடுகள் இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் போது நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.பயன்படுத்தப்படும் மருந்துகளுடன் காலாவதியான மருந்துகள் கலப்படம் செய்யப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதன்போது,சில வைத்தியசாலை களின் களஞ்சிய சாலைகளிலும் சோதனையிடப்பட்டன.இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்கப் பயன்படும் உபகரணப் பெட்டிகள் (Test Kits), பல்வேறு ஆய்வக இரசாயனப் பொருட்கள், டெங்கு நோயைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைப் பெட்டிகள், இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் வகைகள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆய்வகப் பொருட்கள் மற்றும் சாயக் கரைசல்கள் உள்ளிட்ட பல உபகரணங்களும் ஆய்வகப் பொருட்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தமையும் கண்டறியப்பட்டது. இப்பொருட்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.முறைகேடாக சேவை வழங்கிய இத்தகைய வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.




