முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தினர் இணைந்து எட்டு மாதங்களாக முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 230,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைக்கு எதிரான தேசிய செயற்றிட்டத்தின் கீழ்,இச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கமளிக்கும் மாநாடு நேற்று (16) கொழும்பில் இடம்பெற்றது.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஆகியோர் இதில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன; எட்டு மாதங்களாக முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கைகள் திறம்பட முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 08 மாத காலப்பகுதியில் மாத்திரம் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடைய 230,248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சோதனைகளில், நிரபராதிகள் கைது செய்யப்படக் கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாக உள்ளது. இதற்கான தெளிவான அறிவுறுத்தல்கள் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா; விமான நிலையம் மற்றும் தபால் மூலமாக போதைப்பொருட்களை கடத்துவதில் சிலர் கச்சிதமாகச் செயற்பட்டனர்.இவ்வாறான 13 முயற்சிகள் கடந்த ஜூன் மாதத்தில் முறியடிக்கப்பட்டது.மிகச் சிறிய அளவிலான போதைப்பொருட்கள் தபால் மூலம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டாலும், அது சமூகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடும்.இதனால், இத்தகைய கடத்தல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.




