வட கொரியா 5000 தொன் எடை கொண்ட அதிநவீன போர்க்கப்பல்லை நேற்று முன்தினம் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
‘சோ ஹியோன்’ என்ற பெயர் கொண்ட இப்போர்க்கப்பல், கப்பல் எதிர்ப்பு மற்றும் தரைவழித் தாக்குதல் ஏவுகணைத் திறன்களைக் கொண்ட விசாலமான கப்பல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலை உத்தியோகபூர்வமாக பணியில் ஈடுபடுத்தும் நிகழ்வு வட கொரியாவின் நாம்ஃபோ கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் உரையாற்றும் போது, இந்த போர்க்கப்பலை சேவையில் ஈடுபடுத்துவதன் ஊடாக வட கொரியாவின் கடற்படை மேலும் பலப்படுத்தப்படுகிறது. எமது இராணுவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலான எமது கடற்படையின் தேக்கநிலைக்கு இக்கப்பலின் இணைப்பு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும். நவீன வடகொரிய கடற்படையின் முதல் கப்பலாக இது இருக்கும். இதைவிடப் பெரிய கப்பல்கள் வரவிருக்கின்றன.
இராணுவ தளவாடங்களைப் பொறுத்தவரை, நமது ஆயுதப் படைகளின் அனைத்து சேவைகளிலும் கடற்படையே மிகவும் பலவீனமானதாக இருந்தது. இனிமேல் நமது கடற்படையின் போர்த் திறன் கற்பனைக்கு எட்டாத அளவிற்குப் போற்றத்தக்கதாக வளர்ச்சியடையும். இக்கப்பல், வடகொரியாவின் பாரம்பரிய கடற்படை கட்டமைப்பிலிருந்து ஒரு படி மேம்பட்டதாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
சி.என்.என்




