மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தால் தோல்வியை சந்தித்தது. இதனால் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணி 1–0 என முன்னிலை பெற்றது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த முதல் போட்டி சீரற்ற காலநிலையால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் அந்த ஆட்டம் நேற்று (23) நடைபெற்றது. 36 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களையே பெற்றது.
அணித் தலைவர் நிபுன் தனஞ்சய மாத்திரம் அரைச்சதம் ஒன்றைப் பெற்றார். 73 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகளுடன் 65 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த மேற்கிந்திய தீவுகள் வளர்ந்துவரும் அணி முதல் 3 விக்கெட்டுகளையும் 35 ஓட்டங்களுக்கு இழந்தபோதும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டமெல் எவன்லைன் (ஆட்டமிழக்காது 77) மற்றும் கெவ்லன் அன்டர்சன் (58) 4 ஆவது விக்கெட்டுக்கு 110 ஒட்ட இணைப்பாட்டத்தைப் பெற்று வெற்றியை நெருங்கச் செய்தனர். இதன்மூலம் மேற்கிந்திய வளர்ந்துவரும் அணி 31 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்காக 185 ஓட்டங்களை எட்டியது. இலங்கை வளர்ந்தவரும் அணி சார்பில் கவிஜ கமகே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.




