நாட்டில் டெங்கு நோய் வெகு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இத்தொற்றுக்கு இதுவரை 45,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நேற்று வரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக நாட்டில் நாளாந்தம் 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்களே பதிவாகின்றனர். தற்போதைய ஆபத்தான சூழ்நிலையுடன் அண்மைய நாட்களாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது, நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதென்றும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, நோயாளர்களைக் கவனித்துக்கொள்வதில் டாக்டர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் தற்போது கடுமையான மன மற்றும் உடல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலை காரணமாக, எதிர்காலத்தில் நோயாளர்களின் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




