உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்றுள்ள அதிகாரிகள், உக்ரைன் மீட்புப் படையினர் இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்டனர் எனவும் கூறியுள்ளனர்.
டினிப்ரோவில் கொல்லப்பட்ட 12 பேரில், ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து எட்டு வயது சிறுவனும் ஒரு பெண்ணும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த தாக்குதல்களின் போது நாடு முழுவதும் பொதுமக்களின் உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் குறிவைக்கப்பட்டதாகவும், இதில் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் குறித்து விஷேட கவனம் செலுத்துமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைன் முன்னெடுத்த கடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தாக்குதல் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி



