ஆபிரிக்க கண்ட நாடுகளில் ஒன்றான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய்ப் பரவலைத் தொடர்ந்து உலகளாவிய சுகாதார அவசரநிலையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இடுரி மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்நோய்த் தொற்றுக்கு சுமார் 246 பேர் உள்ளாகியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்ற அதேநேரம், 80 மரணங்களும் பதிவாகியுள்ளன. இத்தகைய சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த சுகாதார அவசர நிலையை விடுத்திருக்கிறது.
இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில், இது ஒரு பெருந்தொற்று அவசரநிலைக்குரிய கட்டத்தை அடையவில்லை. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுப் பதிவாகி வருவதை விட இது மிகப் பெரிய நோய்ப் பரவலாக மாறக்கூடும். அத்தோடு உள்ளூர் மற்றும் பிராந்திய அளவில் பரவுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயமும் உள்ளது.
தற்போதைய எபோலா வகை, புண்டிபுக்யோ வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை. இந்நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தசை வலி, சோர்வு, தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை வெளிப்படும்.
அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் தடிப்புகள் மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும்.இட்டூரி மாகாணத்தின் தலைநகரான புனியா, மற்றும் தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு, ருவாம்பாரா உள்ளிட்ட மூன்று சுகாதார பிராந்தியங்களில் எட்டு பேருக்கு இவ்வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகிக்கப்படும் தொற்றுகளும் இறப்புகளும் பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பி.பி.சி



