இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வர்த்தக விசாரணையை அமேரிக்கா தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அதிகப்படியான தொழில்துறை திறனை குறிவைத்து, 16 முக்கிய வர்த்தக நாடுகளுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த பட்டியலில், இந்தியா சீனா, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தைவான், இந்தோனேசியா, வங்காளதேசம், சுவிட்சர்லந்து, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும்.
ஆனால், அமெரிக்காவின் இரண்டாவது பாரிய வர்த்தக கூட்டாளியான கனடா இந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை Trade Act of 1974-ன் Section 301 சட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.
சில நாடுகள் அரசு உதவிகள், குறைந்த ஊதியம், அரசு நிறுவனங்களின் வணிக செயல்பாடுகள், நாணயக் கொள்கைகள், சுற்றுசூழல் மற்றும் தொழிலாளர் தரநிலைகளின் பலவீனங்கள் மூலம் உலக சந்தையில் அநியாயமான போட்டியை உருவாக்குகின்றன என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கட்டாய உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இறக்குமதிகளை மையமாகக் கொண்டு, மற்றோரு தனி விசாரணையை தொடங்கவுள்ளதாகவும், அதில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உய்குர் இஸ்லாமியர்களைக் கொண்டு கட்டாய தொழிலாளர் முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ட்ரம்ப் விதித்த சில சுங்க வரிகள் சட்டவிரோதமானவை என அறிவித்த பின்னர், புதிய சட்ட அடிப்படையில் சுங்க அழுத்தத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.




