இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையை புதுடெல்லியில் தொடங்கியுள்ளன.
பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், இரு நாடுகளும் Terms of Reference-ல் (ToR) கையெழுத்திட்டதன் மூலம் பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்கினர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்பும் அதிகபட்ச பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை குறைக்க அல்லது நீக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், சேவைகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புதுமை தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம், சுங்க நடைமுறைகள், அறிவுசார் சொத்து உரிமைகள், தொழில்நுட்ப தடைகள், சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகள் போன்ற பல அம்சங்கள் குறித்து நிபுணர்கள் விவாதிக்கின்றனர்.
வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அஜய் பாட்டூவா இந்தியாவின் பிரதான பேச்சுவார்த்தை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இஸ்ரேலின் பிரதான பேச்சுவார்த்தை அதிகாரியாக Yifat Alon Perel-ம் உள்ளார்.
கடந்த காலத்தில் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், 2021-இல் அது நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளின் வணிக உறவுகள் புதிய உயரத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




