ட்ரம்பின் விமானத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டு புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் World Economic Forum (WEF) மாநாட்டில் பங்கேற்க புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவரது அதிகாரப்பூர்வ விமானமான Air Force One திடீரென யூ-டர்ன் செய்து மீண்டும் Joint Base Andrews-க்கு திரும்பியது.
விமானத்தில் ஏற்பட்டது “சிறிய மின்சார கோளாறு” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறப்பட்ட சில நிமிடங்களில் பத்திரிகையாளர் பிரிவில் விளக்குகள் அணைந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் திரும்பியதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட் தெரிவித்துள்ளார்.

பின்னர், ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டு, பிறகு மீண்டும் டாவோஸுக்குப் புறப்பட்டனர்.
இந்த இடையூறு, டிரம்பின் பயணத்தை சுமார் இரண்டு மணி நேரம் தாமதப்படுத்தியது.
ட்ரம்ப், டாவோஸில் பல உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறிப்பாக, கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஏற்படும் விவாதங்கள் முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, அமெரிக்க அரசியல்வாதிகள் பயணித்த சில விமானங்களும் தொழில்நுட்ப கோளாறுகளால் திரும்பிய சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், Air Force One-க்கு மாற்று விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், ட்ரம்பின் டாவோஸ் பயணத்தை சற்று சிக்கலாக்கினாலும், அவர் திட்டமிட்டபடி மாநாட்டில் பங்கேற்கிறார்.




