காசாவுக்கான அமைதி வாரியத்தில் இணையக்கோரிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கோரிக்கையை பிரான்ஸ் புறக்கணித்துள்ளதால் ஆத்திரமடைந்துள்ள ட்ரம்ப், மேக்ரானை வழிக்கு வரவைப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேக்ரானை வழிக்கு வரவைப்பேன்…
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை கட்டியெழுப்புவது முதலான காரணங்களுக்காக அமைதி வாரியம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுவருகிறார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.

தனது அமைதி வாரியத்தில் இணைய பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துவரும் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், ட்ரம்பின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது பிரான்ஸ். ஆகவே, ஆத்திரமடைந்துள்ள ட்ரம்ப், மேக்ரானை வழிக்கு வரவைப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
நான் பிரான்ஸ் தயாரிப்பான ஒயின் மற்றும் ஷாம்பெய்ன் மீது 200 சதவிகித வரிகள் விதிப்பேன். அதற்குப் பிறகு மேக்ரான் தானாகவே வந்து எனது அமைதி வாரியத்தில் இணைந்துகொள்வார் என நக்கலாக கூறியுள்ளார் ட்ரம்ப்.
மேலும், மேக்ரான் தனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய செய்தி ஒன்றையும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ட்ரம்ப்.
அந்த செய்தியில், ’என் நண்பரே, சிரியா விடயம் சரிதான், ஈரானும் அப்படித்தான், ஆனால், கிரீன்லாந்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என மேக்ரான் தனிப்பட்ட முறையில் கேட்ட செய்தியை, வெளிப்படையாக சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார் ட்ரம்ப்!




