சீனாவின் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் ஒன்று சிறுவன் ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது கீழே விழுந்து சேதமடைந்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழே விழுந்த தங்க கிரீடம்
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற கண்காட்சியில் எதிர்பாராத விதமாக சிறுவனின் கை பட்டு சுமார் ரூ. 2.35 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் கீழே விழுந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட சிறுவன் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த போது சுமார் ரூ. 2.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள தங்க பீனிக்ஸ் கிரீடம் அருகே புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தன்னை அறியாமல் காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தட்டியதால் அதன் மீது வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் தவறி கீழே விழுந்து சேதமடைந்தது.
இது தொடர்பான வீடியோவை 1.36 கோடி பின்தொடர்பவர்களை கொண்ட ஜாங் கை யி என்ற இணையதள பிரபலம் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்த கிரீடம் தன்னுடைய கணவர் ஜாங் யுடோங்கால் அவர்களது திருமணத்திற்கு சிறப்பு பரிசாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தங்களுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக 7 மாத கர்ப்பிணியான ஜாங் கை யி தெரிவித்துள்ளார்.
மேலும் பகிரப்பட்ட வீடியோ, தவறுதலாக தட்டிவிட்ட சிறுவனையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ குறை கூறுவதற்காக பகிரப்படவில்லை, அந்த தங்க கிரீடம் காப்பீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஜாங் கை யி தெரிவித்துள்ளார்.




