வங்காள விரிகுடாவில் பனாமா கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலொன்று மூழ்கியதைத் தொடர்ந்து, அக்கப்பலில் இருந்த இரண்டு சீன மாலுமிகள் இந்திய கடற்படையினால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாராதீப் கடற்கரையிலிருந்து சுமார் 230 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில்
24 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த இக்கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையினர் விரைந்து செயற்பட்டு கிழக்குக் கடற்கரையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். அதன் ஊடாக இரண்டு சீன நாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்தியக் கடல்சார் நிர்வாகத்தின் பிரதான பணிப்பாளர் ஷ்யாம் ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.
ஓஷன் வின்னர் என்ற இக்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த சமயம் கடந்த வெள்ளிக்கிழமை ஒருபுறம் சாய்ந்த எட்டு நிமிடங்களுக்குள் மூழ்கியதாகவும், அதனால் பணியாளர்கள் கப்பலைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மீட்கப்பட்டுள்ள இரண்டு சீன மாலுமிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடலோரக் காவல்படையின் தகவல்களின்படி, காணாமல் போன 22 மாலுமிகளில் 18 பேர் சீன நாட்டினர், மூவர் மியான்மர் நாட்டினர் மற்றும் ஒருவர் பங்களாதேச நாட்டவர் ஆவர். அதனால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரும்பை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி இக்கப்பல் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குளோபல் டைம்ஸ், ரொய்ட்டர்ஸ்




