மெட்ரோ பஸ் திட்டம் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக கூறி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மெட்ரோ பஸ் திட்டம் புதிதாக முன்வைக்கப்பட்ட திட்டமல்ல.2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இத்தகைய திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவை தாம் போக்குவரத்து அமைச்சுக்கு சமர்ப்பித்ததாகவும், அதற்கான எழுத்துமூல ஆவணம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் எக்ஸிம் வங்கியின் கடன் உதவியைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வரிப்பணத்தைச் சார்ந்திருக்காமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இதேபோன்ற கீழ்தள வசதியைக் கொண்ட பஸ்கள் இலங்கை லேலண்ட் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட 60 பஸ்கள் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதேபோன்ற சுமார் 20 பஸ்கள் பனாகொடையிலுள்ள லேலண்ட் நிறுவன வளாகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலும் இதேபோன்ற திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதிகளவு செலவு ஏற்பட்டதன் காரணமாக அத்திட்டம் வெற்றியடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




