பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்து தகவல்களைப் பெற வேண்டியுள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகமவால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.




