பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 10 ஆவது தெற்காசிய கராத்தே சம்பியன்சிப் போட்டியில் 85 பதக்கங்களை வென்ற இலங்கை தேசிய கராத்தே அணி நேற்று முன்தினம் (21) மாலை நாடு திரும்பியது.
ஸ்ரீலங்கன் விமானத்திற்குச் சொந்தமான யு.எல். 190 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த இலங்கை தேசிய அணியை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு அதிகாரிகள், இலங்கை கராத்தே சங்க அதிகாரிகள் மற்றும் வீர, வீராங்கனைகளின் உறவினர்கள் இணைந்து வரவேற்றனர்.
இந்தப் போட்டியில் இலங்கை 13 தங்கப் பதக்கங்கள், 23 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 49 வெண்கலப்பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. தவிர அணியுடன் இணைந்த 05 இலங்கை பயிற்சியாளர்களுக்கு ஆசிய கராத்தே சம்மேளனத்தின் பயிற்சியாளர்களுக்கு உரிய அனுமதிப்பத்திரத்தையும் பெறுவதற்கு முடிந்தது.




