இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றம் கண்டுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதனத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய இளையோர் அணி முதல் இன்னிங்ஸுக்காக 105.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 411 ஓட்டங்களைப் பெற்றது. குஷக்ரா ஒஜா (111) மற்றும் மனால் சௌஹான் ஆகியோர் (150) சதம் பெற்றனர்.
இந்நிலையில் நேற்று (21) இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி அடுத்தடுத்து. விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை இளையோர்கள் 40 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. மத்திய பின் வரிசையில் துல்னித் சிகேரா பெற்ற 31 ஓட்டங்களுமே அதிகமாக இருந்தது. தவிர, ஆரம்ப வீரர் திமன்த மஹவிதான (24) மற்றும் விரான் சமுதித (21) ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர்.இதன்படி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 2 விக்கெட்டுகள் மாத்திரமே கைவசம் இருக்க இந்தியாவை விடவும் 289 ஓட்டங்களால் பின்தங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




