சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பானுக்கு எதிராக உளவு வேலைகள், கடல்சார் ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதாரக் கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பன்முக அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. டோக்கியோவின் நெகிழ்ச்சித்தன்மையையும், அமெரிக்காவுடனான அதன் கூட்டணியின் நம்பகத்தன்மையையும் பீஜிங் சோதித்துப் பார்க்கிறது. இதற்கு ஜப்பானும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
சீனாவின் உளவு அமைப்புகள் ஜப்பானின் மேம்பட்ட குறைக்கடத்திகள் , ரோபாட்டிக்ஸ் மற்றும் உற்பத்தித் துறைகளைக் குறிவைக்கின்றன.இணைய ஊடுருவல்கள் மற்றும் உள்நாட்டினரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஜப்பானின் போட்டித்திறனை சீனா அச்சுறுத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஜப்பான் தனது எதிர்-உளவுத்துறை வளங்களை விரிவாக்க வேண்டும், கல்வி பரிமாற்றங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் மற்றும் தொழில்நுட்பத் திருட்டைத் தடுக்க ஜப்பான்-அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்காகு தீவுகளைச் (Senkaku Islands) சுற்றியுள்ள கடல் பகுதிக்குள் சீனாவின் கடலோர காவல்படை மற்றும் மீன்பிடி கப்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக நுழைந்து, அப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றன.
ஜப்பான் தனது கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும், நட்பு நாடுகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு தங்களின் இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
அரிய வகை கனிமங்கள் விநியோகச் சங்கிலியில் சீனாவின் ஆதிக்கம் ஜப்பானுக்கு ஒரு பலவீனமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான விநியோகத்தை சீனா எப்போது வேண்டுமானாலும் தடை செய்யக்கூடும்.ஜப்பான் தனது இறக்குமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டும், மீள்சுழற்சி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து ஒரு கூட்டு அரிய கனிமப் பாதுகாப்பு முயற்சியைத் தொடங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
சீனாவின் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல்களை ஜப்பான் தனித்து எதிர்கொள்ள முடியாது. ஜப்பானைப் பாதுகாப்பது என்பது உலகளாவிய விதிமுற அடிப்படையிலான ஒழுங்கைப் பாதுகாப்பதாகும். எனவே, நட்பு நாடுகள் ஒன்றிணைந்து ராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான கூட்டு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




