பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் அஹ்மதியா சமூகத்தினர் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மனித உரிமை நெருக்கடிகள், பாகுபாடான சட்டங்கள் மற்றும் அரசின் பலவீனமான பாதுகாப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் அரசு கடந்த 1974-ஆம் ஆண்டில் அஹ்மதியாக்களை “முஸ்லிம்கள் அல்லாதவர்கள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பின்னர் 1984-இல் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தங்களின்படி, அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று பொதுவெளியில் அறிவிப்பதோ, இஸ்லாமிய வழிபாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ அல்லது தங்களின் வழிபாட்டுத் தலங்களை “மசூதி” என்று அழைப்பதோ குற்றமாக மாற்றப்பட்டது. இது அவர்களின் அடிப்படை நம்பிக்கை மற்றும் அடையாளத்தையே குறிவைப்பதாக உள்ளது.
தேர்தல் சட்டங்களின்படி, அஹ்மதியாக்கள் தங்களை முஸ்லிம்கள் அல்லாத தனிப் பட்டியலில் இணைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டால் அல்லது தங்களின் நம்பிக்கையைக் கைவிட்டால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கவோ பங்கேற்கவோ முடியும் என்ற நிலை உள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர்கள் கடுமையான பாகுபாட்டைச் சந்திக்கின்றனர். மேலும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் இருந்தும் அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஐநா மனித உரிமைகள் அமைப்பின் (UNHCR) 2024-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இச்சமூகத்தினருக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கல்லறைகள் கூட சிதைக்கப்பட்டு, அவர்களின் இறுதிச் சடங்குகளுக்குக் காவல்துறை மூலமாகவே முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
பல நேரங்களில், தீவிரவாதக் கும்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அஹ்மதியாக்களைக் காப்பதற்குப் பதிலாக, அந்த வன்முறைக் கும்பல்களின் அழுத்தத்திற்குப் பணிந்து காவல்துறையே இச்சமூகத்தினரைக் கைது செய்யும் அவல நிலையும் நீடிக்கிறது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் பல சர்வதேச உடன்படிக்கைகளை நேரடியாக மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் இந்த மத அவதூறு சட்டங்களும் பாகுபாடுகளும் வன்முறையைத் தூண்டும் முக்கியக் காரணிகளாக உள்ளன. சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இணங்க, பாகிஸ்தான் அரசு இந்த பாகுபாடான சட்டங்களை நீக்க வேண்டும், வன்முறையாளர்களைத் தண்டிக்க வேண்டும் மற்றும் அஹ்மதியா சமூக மக்களைச் சமமான குடிமக்களாக நடத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.




