அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக, ஸ்டார்லிங்க் இணைய ரிசீவர்களை ஈரானுக்குள் கடத்தியதாக இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜெருசலமில் நடைபெற்ற ஜே.என்.எஸ் சர்வதேசக் கொள்கை உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு இறுதியிலும் இவ்வாண்டு தொடக்கத்திலும் ஈரானிய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தெரிந்ததே.
அந்த மாநாட்டில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் தொடரான செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் ஸ்டார்லிங்க் ரிசீவர்களை ஆயிரக்கணக்கில், ஈரானுக்குள் கடத்தும் ஒரு செயல்முறையை நான் முன்னெடுத்தேன். போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து, ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு இந்தக் கருவிகள் உதவும் என்ற நோக்கிலேயே அனுப்பப்பட்டது’ என்றும் குறிப்பிட்டார்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள் இணைய இணைப்புகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது
தனது பாதுகாப்பை சீர்குலைப்பதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் இக்கருவிகளைக் கடத்துவதாக ஈரான் இதற்கு முன்னர் குற்றம் சாட்டின. ஸ்டார்லிங்க் ஈரானில் செயல்பட உரிமம் பெறவில்லை, ஆனால் அந்தச் சேவை அங்கு செயலில் இருப்பதாக மஸ்க் முன்னர் கூறியிருந்தமை தெரிந்ததே.




