பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமது பதவி விலகலை இன்று திங்கட்கிழமை அறிவிப்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்டி பர்ன்ஹாம் தொழிலாளர் கட்சித் தலைவராகப் பதவியேற்பதற்கு வழிவிட வேண்டும் என தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வந்த கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து, கெய்ர் ஸ்டார்மர் இன்று பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும், கட்சியின் குறைந்தது 20 சதவீதம் அல்லது 81 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில் ஸ்டார்மர் அரசாங்கத்தின் சார்பில் நேற்று கருத்து தெரிவித்த வர்த்தகச் செயலாளர் பீட்டர் கைல், ஸ்டார்மரின் திட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்த போதிலும், பிரதமர் அரசியல் யதார்த்தங்களை அறிந்திருப்பதாகவும், நாட்டிற்கு எது சிறந்ததோ அதைச் செய்வார்’ என்றும் கூறினார்.
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலின் ஊடாக பர்ன்ஹாம் வெஸ்ட்மின்ஸ்டருக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்னர், பர்ன்ஹாம் அல்லது வேறு யாரிடமிருந்தும் தலைமைப் பதவிக்கு சவால் ஏற்படுமாயின் அதனை எதிர்த்துப் போராடுவோம் என்று பிரதமர் ஸ்டாமரும் அவரது நண்பர்களும் கூறி வந்தனர்.
வர்த்தக செயலாளர் கைல் மேலும் கூறுகையில், ஸ்டார்மர் தனது எதிர்காலம் குறித்தும், தேசிய நலனுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் மிகவும் கவனமாகச் சிந்தித்து வருகிறார். அவர் நாட்டின் நலன்களில் மிகவும் கவனமாக உள்ளார். கடந்த வௌ்ளியன்று இடம்பெற்ற சந்திப்பின் போது, நாடு என்ன விரும்புகிறது என்பது தொடர்பில் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டு, அவர் என் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார் என்றும் கூறினார்.




