எண்ணெய் களஞ்சியங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கிரிமியாவிலுள்ள பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.இதன் விளைவாக கிரிமியாவில் உள்ள பெற்றோல் நிலையங்கள் அனைத்து பொது விற்பனையையும் நிறுத்தியுள்ளன.
எண்ணெய் களஞ்சியங்களின் உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன் விளைவாக, ரஷ்ய ஆதரவு ஆளுநர் செர்ஜி அக்சியோனோவ் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த தொடர் தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். இத்தாக்குதல்களைத் தொடர்ந்து தீபகற்பம் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள், பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் விற்பனையை நிறுத்தியுள்ளன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தாயகமாக விளங்கும் கிரிமியாவின் விநியோகப் பாதைகளைக் குறிவைத்து, உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
239 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறுகையில், கிரிமியன் பாலத்தின் இருபுறமும் உள்ள வசதிகள் தாக்கப்பட்டன. கிராஸ்னோடார் பகுதிக்கு எண்ணெய் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் கடல்வழி தளவாடங்கள் மற்றும் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட கெர்ச்சில் உள்ள ஒரு எண்ணெய் களஞசியம் ஆகியவை இதில் அடங்கும் என்றுள்ளார். டெலிகிராப்




