அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், NBC நியூஸ் ஊடகத்தின் மூத்த ஊடகவியலாளர் கிறிஸ்டன் வெல்கருடனான நேர்காணலின் போது ஏற்பட்ட கடுமையான காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, நேர்காணலை அதிரடியாகப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் வைத்து இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் மற்றும் தற்போது கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை செயல்முறைகளில் முறைகேடுகள் நடப்பதாக ஜனாதிபதிட்ரம்பினால் முன்வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இருக்கும் உறுதியான ஆதாரங்களைவழங்குமாறு வெல்கர் மீண்டும் மீண்டும் அழுத்தமாகக் கேட்டபோது விவாதம் கடுமையான பதற்றமாக மாறியது.
ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு: தனது குற்றச்சாட்டுகளுக்கு “ஏராளமான ஆதாரங்கள்” இருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதனை ஏற்க மறுக்கும் முன்னணி ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், செய்தியாளர்களை “ஊழல்வாதிகள்” என்றும் சாடினார். தொகுப்பாளரைச் சாடிய ஜனாதிபதி வெல்கரின் தொடர் கேள்விகளால் அதிருப்தியடைந்த ட்ரம்ப், “நீங்கள் ஒன்று ஊழல் நிறைந்தவராக இருக்க வேண்டும் அல்லது முட்டாளாக இருக்க வேண்டும்” என்று நேரடியாகவே தொகுப்பாளரை நோக்கிப் பேசினார்.
விவாதம் எல்லை மீறியதைத் தொடர்ந்து, தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோபோனைக் கழற்றி எறிந்துவிட்டு, நேர்காணல் தளத்தை விட்டு ட்ரம்ப் உடனடியாக வெளியேறினார்.
வெளியேறும் போது, “இத்துடன் இதனை முடித்துக்கொள்வோம், ஏனென்றால் எனக்கு இது போதுமானது. நன்றி, டார்லிங் (Thank you, darling)” என்று கூறிவிட்டு, விஸ்கான்சினுக்குத் தமக்காகப் பயணித்து வந்த வெல்கரின் கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டு ட்ரம்ப் அங்கிருந்து நகர்ந்தார். இந்த வாக்அவுட் (Walkout) வீடியோ தற்போது சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.



