பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், மூளைக்காய்ச்சலால் வாழ்வே தலைகீழாக மாறிப்போன இளம்பெண்ணொருவர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
வாழ்வையே தலைகீழாக மாற்றிய மூளைக்காய்ச்சல்
வேல்ஸ் நாட்டிலுள்ள Cardiff பல்கலையில் மருத்துவம் பயின்றுவந்தார் லில்லி (Lily McGarry). மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, 21 வயதான லில்லிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அவருக்கு மூளைக்காய்ச்சல் என தெரியவரவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லில்லி கோமாவுக்குச் சென்றார்.
கோமாவிலிருந்து கண் விழித்தபோது, லில்லியின் வாழ்வே மாறிப்போயிருந்தது. தன் இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் லில்லி.
ஆனால், லில்லியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களுமோ, அவர் கண்விழித்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
ஆம், எத்தனையோ பேர் மூளைக்காய்ச்சலால் உயிரிழக்கும் நிலையில், தங்கள் பிள்ளை உயிர் பிழைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்.
தடகள வீராங்கனையும், நீச்சல் வீராங்கனையுமான லில்லியின் வாழ்வு, மூளைக்காய்ச்சலால் தலைகீழாக மாறிவிட, சக்கர நாற்காலி, குடும்பத்தினர், மருத்துவ உதவியாளர்கள் உதவியுடன் நடமாடி வரும் லில்லிக்கு இப்போது 25 வயதாகிறது.
தனது புதிய வாழ்வுடன் பழகிக்கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார் லில்லி.




