இலங்கை மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளருக்கு தெரிவுக் குழுவில் இருக்கும் மூன்று உறுப்பினர்களும் நேற்று (27) தமது இராஜினாமா கடித்தை வழங்கியுள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் தெரிவுக்கு குழுவில் ஐந்து பேர் இருந்தபோதும் தலைவர் உட்பட இருவர் தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகிய நிலையில் மூன்று உறுப்பினர்களே செயற்பட்டு வந்தனர். இந்நிலையில் சில காரணங்களை கூறியே இவர்களும் தமது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இதன்படி முன்னாள் விளையாட்டு உதவிப் பணிப்பாளர் டி.ஏ. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுனர் வீரரான கோர்ணல் எம்.கே.பீ. ஜயசேகர மற்றும் ரவி வித்யாலங்கார ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.
‘அண்மைக் காலமாக எம்மிடம் அறிவிக்காமலேயே நாம் தேர்வு செய்து அனுப்பும் வீர, வீராங்கனைகளை நீக்கி நாம் தேர்வு செய்யாத வீர, வீராங்கனைகளை உள்ளடக்குகிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியவில்லை; ஊடகங்கள் மூலம் மாத்திரமே நாம் தெரிந்து கொள்கிறோம். இது எமக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது’ என்று இராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் எம்.கே.பீ. ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.




