நியூ யங்ஸ் அணிக்கு எதிராக நேற்று (26) நடைபெற்ற சுப்பர் லீக் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் 3–0 என வெற்றியீட்டியது.
கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறத் தவறியபோதும் கொழும்பு இரண்டாவது பாதியில் முழு ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியது. இதன்மூலம் அந்த அணியால் மூன்று கோல்களை புகுத்த முடிந்தது.
கொழும்பு அணி முதல் வாரத்தில் நடைபெற்ற தனது முதல் போட்டியை சமன் செய்த நிலையில் இம்முறை தொடரில் அந்த அணியின் முதல் வெற்றி இதுவாக அமைந்தது. மறுபுறம் நியூ யங்ஸ் இதுவரை ஆடிய இரு போட்டிகளையும் சமன் செய்துள்ளது.
சுப்பர் லீக் தொடரின் இரண்டாவது வாரத்திற்கான மூன்றாவது போட்டியாக இன்று சீ ஹோக்ஸ் மற்றும் ரட்னம் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி சுகததாச அரங்கில் இன்று மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும்.




