இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் ஈட்டி எறிதல் வீரர்களை கண்டறியும் ‘ஜவலின் பியஸ்டா’ திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த விசேட திட்டம் குறித்த ஊடக சந்திப்பு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, இவ்வேலைத்திட்டத்தின் தூதுவராகச் செயற்படும் தேசிய ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் எதிர்கால பயிற்சி மற்றும் விளையாட்டுத் திட்டங்களுக்காக அமைச்சினால் வழங்கப்பட்ட 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலையை அமைச்சர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் கட்டத்தில் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், விளையாட்டு பயிற்சி அமைப்புகள் மற்றும் திறந்த விண்ணப்பங்கள் மூலம் திறமையான வீர, வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி தேசிய குழாம் வரை வழிநடத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.




