தென் சீனக் கடலில் நடந்த மோதலில் தங்கள் கடற்படை மாலுமியொருவரை சீனக் கடலோரக் காவல்படையினர் தாக்கியதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் நேற்று குற்றம் சாட்டியது.
இம்மோதலின் போது, தங்கள் கடற்படை மாலுமியின் தலையில் கடலோரக் காவல்படையினர் மரத்தாலான தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளதாகப் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
மணிலா அயுங்கின் என்ற இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பிலிப்பைன்ஸ் மாலுமி காயமடைந்ததாகவும், கடற்படை ரப்பர் படகொன்று சேதமடைந்ததாகவும் பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தங்கள் போர்க்கப்பலுக்கு அருகில், எட்டு வீரர்களுடன் கூடிய சீனக் கடலோரக் காவல்படையின் படகொன்று நெருங்கி வந்ததை புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிலிப்பைன்ஸ் கடற்படைப் படகுகள் குறித்த கப்பலை வெளியேற்றும் வகையில் சென்ற சமயம், அதன் பணியாளர்கள் தங்கள் கடற்படை வீரர்களைத் தாக்கி வன்முறையாக எதிர்வினையாற்றினர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொய்டடர்ஸ்.




