எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்குள் வருடாந்தம் சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி நிதிப் புழக்கம் கிடைக்கவுள்ளதாக அதன் உத்தியோகபூர்வ உரிமையாளராக உள்ள ஐ.பி.ஜி குழுமத்தின் தலைவர் அனில் மோகன் தெரிவித்துள்ளார்.
இம்முறை விசேட அம்சமாக நேபாளம், அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற ஐ.சி.சி இணை அங்கத்துவ நாடுகளின் வீரர்களுக்காகத் தனிப்பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் எல்.பி.எல் தொடருக்கு சர்வதேச ரீதியில் அதிகளவான பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு முதல் இத்தொடரை ஆறு அணிகளாக விரிவாக்கவும், வரும் காலங்களில் மகளிருக்கான எல்.பி.எல் தொடரை ஆரம்பிக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரானது வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண போன்ற நட்சத்திர வீரர்களை தேசிய அணிக்கு உருவாக்கியதுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் போன்ற இளம் திறமைகளை உலகறியச் செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




