டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக எல்ல மற்றும் நானுஓயா- ரயில் நிலையங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டிருந்த ரயில் பாதை தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஜூன் 20 ஆம் திகதி முதல் பதுளைக்கும் – நானுஓயாவுக்கும் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சூறாவளி அனர்த்தத்தின் போது, எல்ல – நானுஓயா- ரயில் பாதையில் 134 ஆவது மைல் பகுதியில் சுமார் 65 அடி ஆழமும், 100 அடி அகலமும் கொண்ட பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
கடினமான காலநிலை மற்றும் புவியியல் சவால்களுக்கு மத்தியில், ரயில்வே திணைக்களத்தின் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களின் அயராத முயற்சியினால் இப்பாதை தற்போது போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவைகளுக்கான முக்கிய நேர அட்டவணை பின்வருமாறு:
1005/1006 விரைவு ரயில்: நானுஓயாவிலிருந்து காலை 9.00 மணிக்கும், பதுளையிலிருந்து மாலை 3.00 மணிக்கும் தினமும் தனது பயணத்தை ஆரம்பிக்கும்.
1015/1016 விரைவு ரயில்: பதுளையிலிருந்து காலை 09:00 மணிக்கும், நாணுஓயாவிலிருந்து பிற்பகல் 02:30 மணிக்கும் புறப்படும்இந்த ரயில் புதன்கிழமைகளில் இயங்காது என்பதை பயணிகள் கவனத்திற் கொள்ளவும்
1043/1044 ‘எல்ல ஒடிஸி’ (Ella Odyssey): சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வசதிகளைக் கொண்ட இந்த ரயில் புதன்கிழமைகளில் மாத்திரம் இயங்கும். இது பதுளையிலிருந்து காலை 7.45 மணிக்கும், நானுஓயாவிலிருந்து பிற்பகல் 1.00 மணிக்கும் புறப்படும்.
பயணிகள் குளிரூட்டப்பட்ட மற்றும் விசேட வசதிகள் கொண்ட ஆசனங்களை https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக அல்லது ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.



