இலங்கை தேசிய வைத்தியசாலையில் “Heart to Heart, Side by Side” புகைப்படக் கண்காட்சி

2 Min Read

சீனா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை விபரிக்கும் “Heart to Heart, Side by Side” என்ற விசேட புகைப்படக் கண்காட்சி கொழும்பு, இலங்கை தேசிய வைத்தியசாலையில் நேற்று (16) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் (China Aid) நிர்மாணிக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளி பிரிவு (OPD) கட்டிட வளாகத்தில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ மற்றும் இலங்கையின் சீனத் தூதுவர் ஷி ஷெங்ஹொங் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நீண்டகால நட்புறவைச் சித்தரிக்கும் 350 இற்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சீன அரசாங்கத்தின் 500 மில்லியன் யுவான் (500 million yuan) நிதி உதவியின் கீழ் இந்த புதிய வெளிநோயாளி பிரிவு (OPD) கட்டடம் மிக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் முதன்மை மருத்துவ மையமானஇலங்கை தேசிய வைத்தியசாலை 3,600 இற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளையும், 9,000 இற்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டு எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் உயர்தர இலவச மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது. இந்த புதிய கட்டடம் காரணமாக நோயாளர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் மிகவும் வசதியான மற்றும் தரமான சூழல் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பத் இந்திக குமார, வெளிநோயாளி மற்றும் இதய நோய் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர, சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர் டாங் யான்டி (Tang Yandi), தூதரக அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *