மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் எரிசக்தி இறக்குமதி செலவுகள் அதிகரித்ததன் விளைவாக பாகிஸ்தானின் பணவீக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இவ்வருட மே மாதத்தில் 11.7 சதவீதம் என்றபடி பாவனையாளர் விலைச்சுட்டெண் உயர்ந்ததாக பாகிஸ்தான் புள்ளிவிபரவியல் பணியகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதேநேரம் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 10.9 சதவீதத்தினால் அதிகரித்தது.
எரிசக்தி இறக்குமதிகள் பயணிக்கும் ஹொர்முஸ் நீரிணை நெருக்கடி நீடிப்பதால் எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துள்ளதன் விளைவே இதுவென பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் புள்ளிவிபரவியல் பணியகத்தின் தரவுகளின் படி, வீட்டுவசதி, தண்ணீர், மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றின் விலைகள் 16.78 சதவீதம் அதிகரித்துள்ளன. இது குடும்பங்களின் பட்ஜெட்டில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் 11.5 சதவீதமாக இருந்த பணவீக்கம், நகர்ப்புறங்களில் 11.8 சதவீதமாக சற்று அதிகமாக இருந்ததாகவும் அந்தத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் நகர்ப்புறங்களில் 6.5% ஆகவும், கிராமப்புறங்களில் 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



