இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் ஆரம்பப் போட்டியில் கடந்த முறை சம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜப்னா மற்றும் கோல் அணிகள் மோதவுள்ளன.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பப் போட்டி எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக தொடரின் ஆரம்ப நிகழ்வை இதே மைதானத்தில் கோலாகலமாக நடத்துவதற்கு ஏற்பாடாகி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 17 இல் ஆரம்பமாகவுள்ளதோடு ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி, தம்புள்ளை, பல்லேகல மற்றும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானங்களில் நடைபெறவுள்ளது.
ஐ.பி.ஜி. குழுமத்தின் கூட்டாண்மையுடன் எல்.பி.எல். உரிமையாளராக இலங்கை கிரிக்கெட் சபை இந்தத் தொடரை நடத்துகிறது. இதில் ஜப்னா கிங்ஸ், கோல் கலன்ட்ஸ் உடன் தம்புள்ள சிக்ஸர்ஸ், கண்டி போல்கன்ஸ் மற்றும் கொழும்பு கெப்ஸ் என மொத்தம் ஐந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 2020 இல் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் ஜப்னா கிங்ஸ் அதிகபட்சமாக நான்கு சம்பியன் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பித்தக்கது.
இந்தத் தொடருக்கான எஞ்சிய போட்டி அட்டவணை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.



