புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் தேவஜித் சக்கியா ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் நேற்று முன்தினம் (16) இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலாக விபரங்கள் வெளியாகவில்லை. எவ்வாறாயினும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றை நியமித்த நிலையில் எதிர்காலத் திட்டம் குறித்தே இந்தப் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றுக் குழு பதவி விலகியதை அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி ஒன்பது பேர் கொண்ட சபை ஒன்றை நியமித்தார்.
எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்கால சபை, இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்த நடவடிக்கையில் அவதானம் செலுத்தி இருக்கும் நிலையில் இதனை ஐ.சி.சி. அரசியல் தலையீடு ஒன்றாக பார்க்கும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.சி.சி. இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



