இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் ரட்னம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூ யங்ஸ் கால்பந்து கழகம் 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்தத் தொடரின் ஏழாவது வாரத்திற்கான கடைசி போட்டியாக நேற்று (01) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ரட்னம் அணி வழக்கத்திற்கு மாறாக திறமையை வெளிப்படுத்தியது.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தை 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டுவர அந்த அணியால் முடிந்தது. எனினும் இரண்டாவது பாதியில் நியூ யங்ஸ் மேலும் ஒரு கோலை புகுத்தி வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியுடன் நியூ யங்ஸ் அணி 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியபோதும் ஆரம்ப சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் அந்த அணிக்கு சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற வாய்ப்ப்பு குறைவாகவே உள்ளது.மறுபுறம் கடைசி இடத்தில் இருக்கும் ரட்னம் அணி இதுவரை ஆடிய ஏழு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து ஒரு புள்ளியைக் கூட பெறாத நிலையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.




