ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 75-ஆவது வருடாந்த மாநாடு இன்று (02) புதன்கிழமை பத்தரமுல்ல மொனாச் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெறுகிறது.கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தலைமையில்,இம்மாநாடு நடைபெறும்.
நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்த மாநாட்டில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்த சாதனைகள் மற்றும் முன்னெடுத்த முக்கிய தேசிய திட்டங்கள் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.இதுகுறித்து நேற்று (01) செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்ததாவது;
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் கனிம எண்ணெய், இயற்கை எரிபொருள் ஆராய்ச்சித் திட்டங்கள், எரிபொருள் ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் மொரட்டுவையிலிருந்து போர்ட் சிட்டி வரையிலான பாதை திட்டங்கள் உள்ளிட்ட பிரதான உட்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் சுதந்திரக் கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்டவையாகும்.விடுதலைப்புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் வசம் இருந்ததாகக் கூறப்பட்ட பெருமளவு நிதி மற்றும் கப்பல் சொத்துக்கள் தொடர்பில்,உரிய விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை வௌிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆயுதக் கலவரங்களால் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டு, அரசாங்க மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு இழைக்கப்பட்ட பொருளாதாரச் சேதங்கள் குறித்த தகவல்களையும் சுதந்திரக் கட்சி வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.




