அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, மனித உரிமைகளை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து இதுகுறித்து விளக்கமளித்தனர்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்தல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுதல் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தங்களை இறுதி செய்தல் உள்ளிட்ட விடயங்களையும் வௌிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் தேவை மற்றும் இதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு வௌிநாட்டு இராஜதந்திரிகளுக்குதௌிவுபடுத்தியுள்ளது. பொருளாதார நிலைமை தொடர்பில், 2028ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தவணைகளைச் செலுத்தும் திறன் குறித்து அரசாங்கம் முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதாகவும், 2028 டிசெம்பர் மாதத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் இலங்கையின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.




