ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் நடப்புச் சம்பியனான இலங்கை அணி தனது முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.
டுபாயில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (29) நடந்த பி குழுவுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணியை 19.5 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கே சுருட்ட இலங்கை அணியால் முடிந்தது. இதன்போது அதிரடியாக பந்து வீசிய மிதாலி அயோத்யா மற்றும் சேதனா விமுக்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இடது கை சுழல் பந்து வீராங்கனை சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் இலகுவான இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணி 7.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மாத்திரம் இலங்கை வெற்றி இலக்கான 80 ஓட்டங்களை எட்டியது. அணித் தலைவி சமரி அத்தபத்து 25 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி பி குழுவில் 2 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அணி தனது இரண்டாவது குழுநிலைப் போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (02) இந்தோனோசியாவை எதிர்கொள்ளவுள்ளது.




