இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரில் இரண்டாவது வாரத்தின் கடைசி போட்டியில் அப்கன்ட்ரி லயன்ஸ் அணி ரெட் ஸ்டார் அணிக்கு எதிராக 4–0 என்ற கோல் கணக்கில் மற்றொரு இமாலய வெற்றியை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
அப்கன்ட்ரி லயன்ஸ் தனது முதல் போட்டியில் புளூ ஸ்டார் அணிக்கு எதிராக 9–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய நிலையில் தொடரில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளது. கொழும்பு, சுகததாச அரங்கில் நேற்று (29) நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் அந்த அணி 3–0 என முன்னிலை பெற்றதோடு இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோலை புகுத்தியது.
அப்துல் ரஹ்மான் யஹ்யா 16 ஆவது நிமிடத்தில் கோல் பெற ஆரம்பித்ததோடு தொடர்ந்து மொஹமட் ஆகிப் மற்றும் மொஹமட் இஷான் கோலடித்தனர். இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவில் ஹவீன் ஜூட் நிகலாஸ் மற்றொரு கோலை பெற்று அப்கன்ட்ரி லயன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.




