நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021ஆம் ஆண்டுமுயற்சிகள் தொடங்கின. ரூ. 136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது.
இத்திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. ஹைட்ரஜன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, ரயிலை அறிமுகப்படுத்த கடந்த மே 22ஆம் தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜேர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018ஆம் ஆண்டில் இயக்கப்பட்டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலத்தின் மின்மயமாக்கப்படாத 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் உள்ள 12 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தினமும் 2 முறை இருமார்க்கங்களிலும் இயக்கப்படும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இதன் பயணக் கட்டணம் மிகக் குறைவாக ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை (இந்திய மதிப்பில்) மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாரம்பரிய டீசல் அல்லது மின்சார வயர்களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் வேகம் எடுக்கும்போது உந்துதலை தர லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரிகளும், ரயில் வேகம் குறையும் போது பேட்டரியை தானாகவே ரீசார்ஜ் செய்யும் மறுஉருவாக்க தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளன.
ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த ரயில் அறிமுக நிகழ்ச்சியுடன் ரூ. 14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.பின்னர், ஹரியானாவில் ரூ. 12,470 கோடி, சண்டிகரில் ரூ. 4,700 கோடி, பஞ்சாபில் ரூ. 5,470 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.




