நீர் கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் சம்பவத்தில் நீதியமைச்சர் தமது பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படும் அபாயம் காணப்படும் நிலையில் வெலிக்கடை , மஹர போன்ற சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து அமைச்சர் பாடம் கற்றுக்கொள்ளத் தவறியிருக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி, எதிர்க்கட்சியிலிருந்த சமயம் குறிப்பிட்டிருந்தார். எனினும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள மோதல்களை அரசாங்கம் தடுக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, 27 பேர் உயிரிழந்துள்ளதோடு சுமார் நூறு பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




