ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி நிதியிலிருந்து இராணுவ உதவியாக 6.6 பில்லியன் யூரோ நிதியை உக்ரைன் கோரியுள்ளது.
ஐரோப்பிய அமைதி வசதியின் கீழ் தனது ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளிடம் இந்த நிதியுதவியை உக்ரைன் கேட்டுள்ளது. உக்ரைனின் இந்த ஆண்டு மொத்த பாதுகாப்புத் தேவை சுமார் 136 பில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 53 பில்லியன் யூரோவை எமது வரவு செலவுத்திட்டம் ஈடுசெய்யும் என்று பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் 90 பில்லியன் யூரோ கடனிலிருந்து, இந்த ஆண்டு பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுமார் 28.3 பில்லியன் யூரோக்களை உக்ரைன் பெற்றுக் கொள்ள உள்ளது. ஐரோப்பிய பாதுகாப்பு நிதிக் கொள்கையின் கீழான நிதியுதவிகள், உக்ரைனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ரஷ்யாவின் முன்னேற்ற வேகம் குறைந்துள்ளது. போர்முனையின் சில பகுதிகளில் உக்ரைன் வெற்றிகரமான எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு, ரஷ்யப் பிரதேசத்தின் மீதான தனது நடுத்தர மற்றும் நீண்ட தூரத் தாக்குதல்களைப் பயன்படுத்தி மொஸ்கோவின் தளவாடப் போக்குவரத்தைச் சீர்குலைத்துள்ளது. அத்தோடு ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்தியும் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




