இந்திய கால்பந்து அணி பிஃபா ஆசியான் கிண்ண போட்டியில் பங்கேற்பதால் அந்த அணிக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சாஃப் சம்பியன்சிப் கால்பந்துப் போட்டி மேலும் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சாஃப் சம்பியன்சிப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் பங்களாதேஷில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. எனினும் இதே காலப் பகுதியில் நடப்புச் சம்பியன் இந்திய அணி பிஃபா ஆசியான் கிண்ண போட்டியில் பங்கேற்கவுள்ளது. அதற்கு தயாராகும் வகையிலேயே இந்திய அணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் சாஃப் சம்பியன்சிப் போட்டியை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தத் திகதி மாற்றப்படாவிட்டால் இந்திய அணி இந்தப் போட்டியில் தனது 23 வயதுக்கு உட்பட்ட அணியையே பங்கேற்கச் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே சாஃப் சம்பியன்சிப் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த நிலையிலேயே ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சாஃப் சம்பியன்சிப் போட்டியில் இலங்கையுடன் தெற்காசியாவின் ஏழு நாடுகள் பங்கேற்கவுள்ளன.
இலங்கை கால்பந்து சம்மேளனதிற்கு விதிக்கப்பட்ட தடையால் இலங்கை கால்பந்து அணி கடந்த முறை தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



