பாகிஸ்தானின் ஹங்கோர் வகை முதலாவது நீர்மூழ்கிக் கப்பலான பி.என்.எஸ் எம் ஹங்கோரின் பணிகள் சீனாவின் சன்யா நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வைபவத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப் உட்பட சீனாவின் உயர் தளபதிகள் பலரும் பங்குபற்றியுள்ளனர்.
சீனாவிடமிருந்து எட்டு ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும், ஏனைய நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் கராச்சியிலும் கட்டப்படவுள்ளன.
அந்த வகையில் சீனாவில் கட்டப்பட்டுள்ள முதலாவது ஹங்கோர் வகை நீர்முழ்கிக் கப்பலின் வௌ்ளோட்டமே நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சர்தாரி, ‘ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் தன் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளமையானது, பாகிஸ்தான் கடற்படையின் நவீனமயமாக்கலில் ஒரு வரலாற்று மைல்கல்’ என்றார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், அரேபியக் கடல் மற்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பைத் தடுப்பதிலும், முக்கிய கடல்வழித் தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



