ஆபிரிக்கக் கண்ட நாடுகளில் ஒன்றான எஸ்வதனிக்கு மேற்கொள்ளவிருந்த இராஜதந்திர விஜயத்தை தாய்வான் ஜனாதிபதி லை சிங்-டே இரத்து செய்துள்ளார்.
சீஷெல்ஸ், மொரிஷியஸ், மடகாஸ்கர் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த தாய்வான் ஜனாதிபதிக்கு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்தே அவர் இவ்விஜயத்தை இரத்து செய்துள்ளார்.
தாய்வான் ஜனாதிபதியின் விமானம் பயணிப்பதற்கு தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்த மூன்று நாடுகளையும் சீனா நேற்று முன்தினம் பாராட்டியது.
சீனாவின் அழுத்தம் காரணமாகவே இம்மூன்று நாடுகளும் தங்கள் ஜனாதிபதி பயணிக்க வான்வெளியைப் பயன்படுத்த இடமளிக்கவில்லை என்று தாய்வான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கக் கண்டத்தில் தாய்வானின் தூதரகம் அமைந்துள்ள ஒரே நாடு எஸ்வதனி மாத்திரமேயாகும். இத்தகைய அழுத்தத்தின் காரணமாக தாய்வான் தலைவர் ஒருவர் தனது வெளிநாட்டு இராஜதந்திர பயணத்தை இரத்து செய்ய நேரிட்டது இதுவே முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



